ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

சித்தர்களின் மேலான தெய்வம்


சித்தர்களின் மேலான தெய்வம்!



பெண்மையை இழிவு செய்தவர்கள், அல்லது தூற்றியவர்கள் என்பதாகவே சித்தர்களைப் பற்றி பெரும் பாலானவர்களால் புரிந்து கொள்ளப் படுகிறது. அத்தகைய ஒரு எண்ணப் போக்கினை இந்தபதிவு தகர்த்திடும் என எதிர்பார்க்கிறேன்.

சித்தமெல்லாம் சிவமயமாய் திளைத்திருக்க, ஆதிசக்தியின் அருளும், ஆசியும் பூரணமாக தேவைப் படும். இதை உணர்ந்திருந்த சித்தர்கள், அத்தகைய ஆதிசக்தியின் அம்சம் ஒன்றினையே போற்றி பூசித்தனர்.இந்த அம்சம் பத்து வயதுக்குறிய ஒரு சின்னஞ் சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சர்யமான ஒன்று!, நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று.

இந்த உயர் தெய்வத்தைப் பற்றி கொங்கணவர் பின்வருமாறு கூறுகிறார்.

"வாலையைப் பூசிக்க சித்தரானார்
வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
இந்த விதம் தெரியுமோ? வாலைப் பெண்ணே!"

- கொங்கணவர் -

சித்தர்கள் வணங்கிய அந்த பால தெய்வத்தின் பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. அனைத்திற்க்கும் ஆதி காரணமான இந்த வாலை தெய்வத்தையே சித்தர்கள் அகப்புற வழிகளில் பூசை செய்தார்கள். இந்த வாலையை பூசிக்காத சித்தர்கள் யாருமே இல்லை. இவள் அருமையை போற்றிப் பாடாத சித்தர்களும் இல்லை எனலாம்.

இத்தகைய வாலை தெய்வம் நமது உடலில் இருந்து இயங்குவதை உணர்ந்து கொண்டு அவளே அனைத்திற்கும் காரண காரியமாக இருந்து ஆட்டுவிப்பதை அறிந்து எல்லாவித யோகா ஞானங்களுக்கும் அவளே தலைமைத்தாய் என்று அறுதியிட்டு உரைத்த சித்தர்கள். அவளையே போற்றி பூசித்து சித்தி பெற்றனர்.

சின்னஞ்சிறு பெண்ணான வாலையின் அருளால் சித்தியடைந்து, பின் அவளை கண்ணித் தெய்வமாக வழிபட்டு படிப்படியாக மனோன்மணித் தெய்வமாக பூசை முடித்து, இறுதியில் ஆதிசக்தியின் அருள் பெற்று முக்தி நிலையான மெய்ஞான நிலையினை அடைந்தனர். இதுவே ஞானத்தின் அதி உயர் நிலையாக கருதப் பட்டது. இந்த நிலை எய்தியவர்களே சித்த புருஷர்கள்.

வாலை பூசை என்பது என்ன?

இதன் அருமையினை அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்

"கூடப்பா துரியமென்ற வாலை வீடு
கூறரிய நாதர் மகேச்சுவரியே யென்பர்
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு
நந்திசொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும்
ஊடப்பா சிகாரவரை எல்லாம் தோன்றும்
ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊறலாகும்
தேடப்பா இது தேடு காரியம் ஆகும்
செகத்திலே இதுவல்லவோ சித்தியாமே
வாமென்ற அவள் பாதம் பூசை பண்ணு
மற்றொன்றும் பூசை அல்ல மகனேசொன்னேன்!"

- அகத்தியர் -


                                                            பகிர்வில் .ர.சடகோபால்.BA