திங்கள், 13 அக்டோபர், 2014

பலி கொடுத்தல்

பலி கொடுத்தல்

பலி கொடுத்தல் அல்லது காவு கொடுத்தல் ஒரு சமயச் சடங்கு ஆகும். பலி கொடுத்தல் கடவுளை நோக்கி வரம் வேண்டி கடவுளை மகிழ்ச்சி செய்வதற்காக விலங்குகளை உயிர்ப் பலி கொடுப்பதைக் குறிக்கும். யாகம், பூசை போன்ற சடங்குகளோடு இது இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. பெரிய கோயில்களில் பலி கொடுத்தல் வழக்கத்தில் இல்லை, ஆனால் பல கோயில்களில் ஆடு, கோழி போன்ற விலங்குகளைப் பலி கொடுக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது. 

பலி கொடுத்தல் வேத காலத்தில் ஒரு முக்கிய சடங்காக இருந்தது. பெளத்த சமண சமயங்களின் எழுச்சியும், அவை முன்னிறுத்திய அறக் கோட்பாடுகளும் பலி கொடுத்தலை இந்து சமயத்தின் ஓரத்தில் தள்ளி விட்டது.

பலி கொடுத்தல் தத்துவம்

பலி கொடுத்தல் நம்மில் உறையும் விலங்குக் குணங்களைஅழியச் செய்வதன் மூலம் இறைநெருக்கத்தை எட்டுதலாகும். ஆயினும் இதை மக்கள் வேறொரு வடிவம் கொடுத்துப் பின்பற்றி வருகின்றனர். தாம் செய்த பாவத்தை மன்னிக்க வேண்டி வேறொரு உயிரைப் பலியிடுதல் ஆகமம் சாராத வீரசைவ மரபில் எழுந்த கடைப்பிடிப்பு என வாதிப்பாரும் உளர்.

பலியிடும் முறை

பலியிடப்படும் ஆடு, மாடு போன்ற விலங்குகளில் ஆண் பாலினத்தைச் சேர்ந்தவையே பலியிடுவதற்காகத் தேர்வு செய்யப்படுகின்றன. கோழியாக இருந்தாலும் அதன் ஆண் பாலினமான சேவலையே பலியிடத் தேர்வு செய்கின்றனர். இவற்றில் விலங்கிலோ அல்லது சேவலிலோ வெள்ளை நிறமிருந்தால் அவை நிராகரிக்கப்படுகின்றன. பலியிடத் தயாராயுள்ள விலங்கு அல்லது சேவல் மீது மஞ்சள் கலந்த நீர் தெளிக்கப்படுகிறது. அதன் கழுத்தில் மலர்களாலான சிறு மாலைத் துண்டு அணிவிக்கப்படுகிறது. பின்னர் மஞ்சள் நீர் தெளிக்கப்படுகிறது. அது மூன்று முறை தலையைக் குலுக்கும் போது அது சம்மதம் தெரிவித்து விட்டதாகக் கருதி அதைப் பலியிடுகின்றனர்.

அசைவ உணவு

பலி கொடுக்கப்பட்ட ஆடு அல்லது கோழியின் இறைச்சியை உணவாக்கி சிறு தெய்வங்கள் முன்பு படைத்துவிட்டு அதன் பிறகு அந்த அசைவ உணவை உண்ணும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது போன்ற பலியிட்டு வழிபடும் வழக்கம் காவல் தெய்வங்களான கருப்பசாமி, மாடன், இசக்கியம்மன் போன்ற சிறுதெய்வ வழிபாடுகளிலேயே அதிகம் நடைபெறுகிறது. மாரியம்மன் கோயில்களில் இந்தப் பலியிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டாலும் அது மாரியம்மனுக்குப் படைக்கப்படுவதில்லை. கோயிலிலுள்ள காவல் தெய்வமான கருப்பசாமிக்குப் படைப்பதாகவே கருதப்படுகிறது.

மாயன்கள்

இந்து சமயமட்டுமல்லாது, இவ்வழக்கம் உலகின் பல பகுதிகளில் நடைபெற்று வந்துள்ளது. மெக்சிகோ பகுதிகளில் மாயன் என்னும் இனத்தவர்கள் உயிர் பலி கொடுக்கும் வழக்கமுடையவர்கள். 

                       பகிர்வில் ர.சடகோபால்.BA