வெள்ளி, 12 டிசம்பர், 2014

வாலை தேவி மஹா மந்திரம்

வாலை தேவி என்பவள் சித்தர்களால் வணங்கி வழிபட்டு வந்த ஓர் பெண் தெய்வமாகும். அவ்வாறு சித்தர்களால் வழிபட்டு வந்த தேவியை நாமும் வழிபட மாந்திரிகம் என்னும் நூலில் தேவியின் மந்திரத்தையும் வழிபடும் முறையையும் கருவூரார் சித்தர் கூறியிருக்கிறார். கீழ் காணும் மந்திரத்தை ஒரு லட்சம் உரு ஜெபிக்க சித்தியாம்.
 
மூலமந்திரம்:
                          "ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா வாலை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி நமஹா"

இந்த மந்திரத்தை சித்தி செய்தவர்களுக்கு  மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. மேலும் இந்த தேவியால் சர்வ சுப காரியங்களும் சித்தியாகும். செல்வம் பெருகும். உடலில் உள்ள நோய்களெல்லாம் விலகி விடும்.

                    பகிர்வில் ர.சடகோபால்.BA  

வியாழன், 11 டிசம்பர், 2014

சர்வ வசியம்


ஆமையா றீம் ஐயுங் கிலியுமென்றெ 
 அடைவாக ஸ்ரீயுடனே சவ்வுங் கூட்டித் 
தாமையா இறீம் க்லீம் ஓமென்று சொல்லித் 
 தான்செபிக்க லஷத்திற் சித்தியாகும் 
வாமையா வறுமையெலா மகன்றுபோகும் 
 வளமான தேவதையு மன்னர் தாமும் 
நாமையா லோகமெல்லாம் வசியமாகும் 
 நலமாக தொழிலகளெல்லாஞ் சித்தி தானே
                                                                             -புலிப்பாணி சித்தர் 
பொருள்:
                  "றீம் ஐயுங் கிலியும் ஸ்ரீம் சவ்வும் இறீம் க்லீம் ஓம் "  என்று லட்சம் உரு செபிக்க அம்மந்திரம் சித்தியாய் தரித்தரமெல்லாம் ஒழிந்துபோகும் , இதனால் யாவரும் வசியமாவார்கள். சர்வகாரியங்களும் சித்தியாகும். 

                 பகிர்வில் ர.சடகோபால்.BA   

செவ்வாய், 9 டிசம்பர், 2014

மாந்திரிகம் வசியம்

மாந்திரிகம் என்பது பழந்தமிழத்தில் புழக்கத்தில் இருந்த கலை. பெரும்பாலும் இதொரு தற்காப்பு கலையாகவே அறியப் பட்டிருந்தது. மருத்துவத்திலும் மாந்திரிகத்தின் பயன்பாடுகள் இருந்தன. காலப் போக்கில் மனிதனின் பேராசை இந்த கலையின் திறத்தையும், குணத்தையும் நிழலான காரியங்களின் பக்கம் மாற்றி வைத்தன.

சித்தர் பெருமக்களின் பாடல்க்ளின் ஊடே இந்தக் கலையைப் பற்றி உயர்வாக குறிப்பிடப் பட்டிருக்கின்றது. இந்த கலையினை அறிந்து தெளிந்து தேர்ந்தவர்கள் ஒருபோதும் தங்களை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்களாம். அத்தகைய சிறப்புடையவர்களை எளிதில் இனம் காண இயலாது என கூறியிருக்கின்றனர். மேலும், அவசிய அவசரங்கள் இருந்தால் மட்டுமே இந்தக் கலையினை நாடவும், கைகொள்ளவும் வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.

இந்த மாந்திரிகத்திலும் எட்டு நிலைகளை வகுத்துக் கூறியிருக்கின்றனர். இவற்றை மாந்திரிக அட்டமாசித்து அல்லது அட்டகன்மம் என்கின்றனர். 

வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருசணம், பேதனம், வித்துவேடணம், மாரணம் .ஆகியவையே மாந்திரிகத்தின் எட்டு நிலைகள். இவை குறித்தும் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். இனி வரும் நாட்களில் இந்த அட்ட கன்மங்களைக் கொண்டு நோய்நொடிகள் பிரச்சனைகள் என்று தேடிவரும் மக்களுக்கு எவ்வாறு தீர்வுகளை கொடுக்கபட்டது  என்பதைப் பற்றிப் பார்ப்போம்.



வசியம்.

வசியம் என்பது ஒரு மனிதனை அல்லது மனிதர்களை தன் வயப்படுத்தி, தனது இச்சைகளுக்கு ஏற்ப அவரை அல்லது அவர்களை ஆட்டுவிப்பதேயாகும். இந்த வசியக் கலையை பயன்படுத்தி எந்தவகையில் தீர்வுகளை அளிக்க முடியும் என்பதை அகத்தியர் தனது "அகத்தியர் 12000" என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.

வசியமாய்க் காரீயத்தகடு வாங்கி
வளமாக நயமவசி என்று மாறி
உண்மையுள்ள மாந்தருக்கு கட்டினாக்கால்
பசிதாக மானதுபோல் உனைக் கண்டோர்கள்
பணிவார்கள் வசியமதாய்ப் பண்பாய் மைந்தா
நிசிதமுள்ள மிருக தாவர சங்கங்கள்
நேர்மையுடன் வசியமதாய் வணங்கும்பாரே.

காரீயத்தகடு ஒன்றை எடுத்து, அதில் "நயமவசி" என்று எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த காரீயத்தகட்டை கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து வசிய மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.

இவ்வாறு செபித்து முடிந்ததும், தீர்வும், தேவையும் உள்ளவர்கள் உடலில் இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களுக்கு மிருகங்கள் தாவரங்கள் வசியமாகுமாம். அத்துடன் அவர்களும் பண்பும் பணிவும் நிறைந்தவர்களாக நடந்து கொள்வார்கள் என்கிறார்.

வசிய மூலமந்திரம் - "ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா."


               பகிர்வில் ர.சடகோபால்.BA 

வெள்ளி, 5 டிசம்பர், 2014

மயேந்திர தேவி மஹா மந்திரம்


தானான மயேந்திரையின் மூலங்கேளு 
 தன்மையுள்ள தேவியென்ற மயேந்திரை தான் 
வேனான வம்வறியும் வையும் வாவா 
 வேதாந்த மயேந்திரையாள்  தேவி றாறா
ஆனான வன்புள்ள மைந்தா கேளு 
 ஆச்சரிய மாச்சரிய மைந்தாசொல்வேன் 
மானான நாள் வித மாயிரத்தெட்டாக 
 மண்டலந்தான் னுருச் செய்ய வசியமாமே.
                                                                                       -நந்தீசர் 

பொருள்:
                       மயேந்திரையின் மூல மந்திரம் சொல்கிறேன் கேள். "ஓம் றியும் வையும் வாவா மயேந்திரை தேவி றாறா" மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் 48 நாட்கள் ஜெபம் செய்ய சித்தி ஆகுமாம். இது பல ஆச்சரியமான செயல்களை செய்யும்.

                             பகிர்வில் ர.சடகோபால்.BA 
                  

புதன், 3 டிசம்பர், 2014

ஓங்காரம் ஓம்


ஓம் என்பதிலே எல்லா வேதங்களும் மந்திரங்களும் பிறந்தன. ஆதலால் இதனைச் செபித்தால் எல்லா மந்திரங்களையும் செபிப்பதால் உண்டாகும் பயனை அடையலாம்.
              "ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி 
              ஈதெழுத் தாலே இசைந்தங் கிருவராய் 
              மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை 
              மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே"
                                                                                        -திருமூலர் 


"ஓ" என்னும் முன்னெழுத்தாலே உலகம் எல்லாம் கலப்பால் தானாகி; "ஓ" என்பதை பிரித்தால் அ+உ என்ற ஈரெழுத்தாய் நிற்கும்.அது சிவன், சிவை என்னும் இரு பொருளாய் தோற்றம் பெரும். 
மூன்றெழுத்தாகிய அ+உ+ம்  என்பவற்றால் தோன்றுகின்ற பேரோளியினை "ஓம்" என்பதின் கடையெழுத்தாகிய ம் என்னும் மகர எழுத்தால் உயிர்க்கு மயக்கம் வந்து பொருந்தும்.
"அ" என்றால் சூரியன். "உ" என்றால் சந்திரன். "ம்" என்றால் அக்கினி அதாவது "ஓம்" என்பது எல்லா பிரகாசங்களும் உள்ள பொருட்களின் சுயவடிவமாகும்.   
                        ஓம் என்னும் மகா மந்திரம் உயிர்களை பரமாத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்யும் ஆற்றலை கொண்டிருப்பதால் அது பிரணவ மந்திரம் என்று சொல்லப்படும் 

               பகிர்வில் ர.சடகோபால்.BA   

சக்தி மந்திரம்


பாரப்பா சிவபூஜை செய்துகொண்டு 
 பண்பான தேவிமந்திரம் பகரக்கேளு 
ஆரப்பா அறிவார்கள் அறிவோமென்று 
 அப்பனே ஸ்ரீசிரீங் சிவயவசி வாவென்று 
நேரப்பா சிவரூபி வாவா வென்று 
 நேர்மையுட னோர்மனதாய் நூற்றெட்டானால் 
காரப்பா சக்திசிவம் ரெண்டும்வைத்துக் 
 கருணைபெறத் தொழிற்முகத்திற் பூசைபண்ணே 
                                                                                         -அகத்தியர் பரிபாஷை 300

பொருள்:
                 இது சக்தி பூசை. தேவி மந்திரம் கேள். "ஸ்ரீ சிரீங் சிவயவசி வாவா சிவரூபி வாவா" என்று நூற்றியெட்டு உரு மன ஓர் நிலையுடன் செபிக்க வேண்டும். சக்தி,சிவம் இரண்டையும் வைத்து கருணை பெற தொழில் முகத்தில் பூசை செய்.

          பகிர்வில் ர.சடகோபால்.BA 

செவ்வாய், 2 டிசம்பர், 2014

உடலும் ஆன்மாவும்



உடலை விட்டு ஆன்மா  பிரிந்து விட்டால் அந்த உடலுக்கு யாதொரு மதிப்பும் கிடையாது. ஒன்று உடலைச் சுட்டெரித்து விடுகிறோம் அல்லது புதைகுழிக்குப் போகிறது. ஆக உயிர் தங்கி இருக்கும் வரையில்தான் இந்த உடலுக்கு அவசியமும், தேவையும், மரியாதையும் இருக்கிறது.


இப்படிப் பட்ட இந்த உடலும், உயிரும் எப்போது எப்படித் தோன்றுகின்றன?

எது முதலில் உருவாகிறது?, உடலா?, உயிரா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர் தனது "அகத்தியர் ஆயுள் வேதம்” என்ற தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.

சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய்
இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று
தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி
யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம்
சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று
பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல
ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த
நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும்

- அகத்தியர்.

ஆணின் சுக்கிலத்தில் பிராணவாயு சென்றடைந்து கிளர்ச்சியுற்று உயிரணுக்கள் வளர்ச்சி அடையும். இந்த சமயத்தில் ஏற்படும் உறவினால், பெண்ணின் சுரோணியத்துடன் ஆணின் சுக்கிலம் கலந்து வாத, பித்த, கபம் என்று சொல்லப்படும் மூன்று விகற்பங்களும் அதனுடன் சேர்ந்து சிறு குமிழி போலாகி கருப்பையின் உட்சென்று தங்கி வளரத் துவங்கி, இருபத்தி ஐந்து நாளில் முளை போல தோன்றும் என்கிறார். இது உயிரற்ற ஒரு நிலை.

முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும்
பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி
யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள்
ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே.

- அகத்தியர்.

முதல் மாதத்தின் முடிவில் உருவான இந்த முளை பின்னர் வளர்ந்து ஒரு கட்டிபோல உருவாகுமாம். இரண்டாவது மாதத்தில் பிடறி, தோள், முதுகு ஆகிய பாகங்கள் உருவாகுமாம். மூன்றாவது மாதத்தில் உடல், விலா, இடுப்பு போன்றவைகள் உருவாகும்.அந்த கட்டதில் தான் கருவிற்கு உயிரும் வந்து இணையும் என்கிறார்.

ஆக,கருவானது மூன்றுமாத வளர்ச்சியின் பின்னரே உடலில் உயிர் வந்து சேருகிறது. அதன் பிறகே மற்ற அவயங்கள் வளரத்துவங்குகிறது.

இந்த தகவல்கள் எல்லாம் அறிவியல் வளராத பலநூறு வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்களால் தீர ஆராய்ந்து சொல்லப் பட்டிருக்கின்றன என்பதில்தான் இந்த தகவலின் மகத்துவமே அடங்கி இருக்கிறது. உடற்கூறியியலில் சித்தர் பெருமக்களின் ஆழ்ந்த அறிவு இன்றைய நவீன அறிவியலின் தெளிவுகளுக்கு கொஞ்சம் குறைந்ததில்லை என்பது நாம் பெருமிதத்துடன் நினைவு கூற வேண்டிய ஒன்று.

           பகிர்வில் ர.சடகோபால்.BA 

திங்கள், 1 டிசம்பர், 2014

ஜாலக்காள் தேவி வசிய மூல மந்திரம்

 ஜாலக்காள் தேவி என்னும் தேவதையை சித்தி செய்தால் தான் ஜால விளையாட்டுகளிலும் சித்து வேலைகளிலும் வல்லவராக விளங்க முடியும்.  அப்படி பட்ட ஜாலாக்காள் தேவதையை சித்தி செய்யும் முறையை நந்தீசர் தனது சகல கலைக் ஞானம் நூலில் குறிப்பிடுகிறார். பாடல் பின் வருமாறு,

சாலமென்ற ஜாலக்காள் மூலங்கேளு 
 ஞானிகட்கு யிம்மூலம் நவில்வோங் கேளு 
ஆலமென்ற ஆம் அறியும் அவ்வும் அய்யும் 
 அரகரா ஜாலக்காள் ஆக்கிருஷயா றாறா 
வாலமென்ற வடமுகமாய்க் குந்திக்கொண்டு 
 வளமாக லட்சமுரு மண்டலந்தானோது 
காலமென்ற காலமதில் செபந்தான்செய்ய 
 கனவுபோ லுண்பங்கில் கருச்சொல்வாளே 
                                                                                   -நந்தீசர் சகல கலைக் ஞானம் 
பொருள்:
                  ஜாலத்தின் அதி தேவதை ஜாலக்காள் மூலமந்திரத்தை சொல்கிறேன் கேள் "ஆம் றியும் அவ்வும் ஐயும் ஜாலக்காள் தேவி ஆக்ரூஷய றாறா" வடக்கு முகமாய் அமர்ந்து கொண்டு 48 நாட்கள் லட்சம் உரு கொடுக்க சித்தியாகும்.

நிவேதனம்:
                        தேங்காய் , பழம்., வெற்றிலைப்பாக்கு, பொங்கல் வைத்து சாம்பிராணி  மற்றும் தீபதூபம் காட்டவும்.
இதன் பயன்:
                          மந்திரம் சித்தி செய்தப்பின் ஜாலக்காள் தேவதை கனவில் வந்து குறி சொல்லும்  ஜால வேடிக்கைகள் காண்பிக்கலாம். 

                     பகிர்வில் ர.சடகோபால்.BA 

                 

ஞாயிறு, 30 நவம்பர், 2014

அஞ்சனா தேவி மந்திரம்.


இன்று நாம் பார்க்க இருக்கும் தெய்வத்தின் பெயர் "அஞ்சனா தேவி" அல்லது "அஞ்சனை தேவி".  ஆரம்பத்தில் இந்த தெய்வம் வாயு புத்திரனான ஆஞ்சனேயரின் தாயாராக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதாலும், அத்தகைய குறிப்புகள் வேறெங்கும் இல்லாததினாலும் இந்த தெய்வம் வாலையைப் போல தனித்துவமான தன்மைகளையும், பண்புகளையும் கொண்டவளாய் இருக்க வேண்டும். 

சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் படைப்புகளின் ஊடே புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இடமில்லை. எனது சிறிய அனுபவத்தில்  நான் பார்த்த வரையில் அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணமோ, காரியமோதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த அஞ்சனா தேவியின் அருளை பெறுவதற்கான மந்திரத்தையும், அதை செயலாக்கும் நுட்பத்தையும் அகத்தியர் தனது "அகத்தியர்12000" எனும் நூலில் அருளியிருக்கிறார். அந்த பாடல்கள் பின் வருமாறு.....

ஆச்சப்பா இன்னமொரு மார்க்கங்கேளு
அருளான அஞ்சனா தேவிமூலம்
பேச்சப்பா பேசாத மவுனமூலம்
பிலமான புலத்தியனே சொல்லக்கேளு
மூச்சப்பா நிறைந்தவெளி மூலாதாரம்
முத்திதரும் ஆதாரத்தில் மனக்கண்சாத்தி
காச்சப்பா ஓங்கிலியும் ரங்ரங்கென்று
கண்ணார நூறுருவிற் காணலாமே.

காணுகிற விதமென்ன மைந்தாகேளு
கற்பூர தீபஒளி சோதிபோலே
தோணுகிற போதுமனம் ஒன்றாய்நின்று
சோதியெனு மஞ்சனா தேவியென்று
பேணியவள் பாதமதைசிர மேல்கொண்டு
பிலமாக மானதாய்ப் பூசைப்பண்ணி
ஊணிமன மொன்றாக நீறுசாத்தி
உத்தமனே நித்தியமுந் தியானம்பண்ணே.

பண்ணப்பா நித்தியமுந் தியானம்பண்ண
பதிவான இருதயமே வாசமாகி
முண்ணப்பா நிறைந்ததிரு சோதிபோலே
முக்யமுடன் காணுமந்த சோதிதன்னால்
கண்ணப்பா கண்ணுமன மொன்றாய்நின்று
காணுதடா அண்டபதங் கண்ணிநேரே
உண்ணிப்பா உன்னியந்த விண்ணுமண்ணும்
ஊடுருவிப் பார்த்ததைநீ ஒண்டிக்கேளே.

ஒண்டுமிடந் தனையறிந்து அண்டத்தேகி
ஊசாடு மஞ்சனா தேவிமூலம்
நின்றுமன தறிவாலே தியானம்பண்ணி
நேமமுடன் விபூதியைநீ தரித்துக்கொண்டு
சென்றுஅந்த ஆகாச வெளியைப்பாரு
திருவான அஞ்சனா தேவிதன்னால்
கண்டுகொள்வாய் பகல்காலம் நட்சத்திரங்கள்
காணுமடா கண்னறிந்து கண்ணால்பாரே.

கண்ணாரப் பூமியைநீ நன்றாய்ப்பார்த்து
கருணைவிழிப் பார்வையினால் உண்ணிப்பாரு
பொன்னான பூமிநடுப் பாதளத்தில்
பொருளான வெகுநிதிகள் பொருந்தக்காணும்
முன்னோர்கள் வைத்தநிதி கண்டாயானால்
மோகமென்ற ஆசையைநீ வைக்கவேண்டாம்
மெய்ஞானி செய்தவத்தை நன்றாய்ப்பாரு
மெஞ்ஞான அஞ்சனா தேவிதானே.
                                                                            -அகத்தியர் 12000
மூலாதாரத்தில் மனதை நிறுத்தி, அஞ்சனா தேவியின் மூலமந்திரமான "ஓங் கிலியும் ரங்ரங்" என்ற மந்திரத்தினை நூறு தடவைகள் செபிக்க வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து செபித்து வந்தால் அஞ்சனாதேவி மனக்கண்ணில் ஜோதி வடிவாக காட்சி தருவாளாம். அப்போது நம் நெற்றியில் திருநீறு சாத்தி அந்த தேவியை வணங்கி, மனதால் பூசித்து மந்திர ஜெபத்தை தொடர வேண்டும் என்கிறார்.

இவ்வாறு தொடர்ந்து ஜெபித்து வந்தால், பகல் நேரத்தில் நட்சத்திரங்கள் தென்படுமாம், அத்துடன் பூமியில் பாதாளத்தில் முன்னோர் வைத்த நிதிகளும் தென்படுமாம். அப்போது  அந்த பொருட்களின் மீது ஆசை கொள்ளாமல், மெய்ஞானிகள் செய்த தவ முறைகளை எண்ணினால், அஞ்சனா தேவியின் அருளினால் அவை யாவும் கைகூடும் என்கிறார் அகத்தியர். 

                      பகிர்வில் ர.சடகோபால்.BA 

வெள்ளி, 28 நவம்பர், 2014

தூரத்து செய்தி அறியும் மை


காணுதற்கே யின்மைமொன்றுக  ருவைக் கேளு 
 காசினியில் வேறெல்லாங் காய்க்கும் பூக்கும் 
தோணுதற்கு சொன்ன பலர் வேறே மைந்தா 
 சுத்தமுடன் றானுலர்த்திந றுக்கிக் கொண்டு 
பூணுதற்கு மால்தேவிந ருக்கிக் கொஞ்சும் 
 பக்தியுடன் பாம்பரணை பிச்சுங்கூட்டி
ஆணுவத்தான் மூன்றுமொன்றாய் பொடித்துக் கொண்டே 
 வப்பனே அயக்கரண்டி தன்னிற் போடே.

  -  இவ்வுலகில் இன்னுமொரு அதிசயத்தை கேளு இப்பூமியில் வேரெல்லாம் பூத்துக் காய்க்கும் மூலிகையின் வேரினை எடுத்து உலர்த்தி நறுக்கிக் கொண்டு அதனுடன் தாளகம் பாம்பரணையின் பிச்சு ஆகியவற்றை சம அளவாக எடுத்து பொடித்துக் கொண்டு அயக்கரண்டியில் போட வேண்டும் .

தன்னிலே பசுநெய்யால் வறுத்துக் கொண்டு 
 சாதகமாய் காகிதத்திற்று ழாவி வைத்தே 
உன்னிதமாய் பசுநெய்யால றைத்து மைந்தா 
 உறுதியுள்ள தந்தமென்ற செப்பில் வைத்துத் 
தன்னிலையை தானறிந்துதி யானஞ் செய்து 
 தன்மையுள்ள வெற்றிலையிற்ற டவிப் பாரு 
உன்னிதமாய் வெகுதூர முள்ள செய்தி 
 உறுதியுடன் தோணுமடா வுற்றுப் பாரே
                                                                                      -அகத்தியர் பரிபூரணம்-400

- அதனை பசு நெய்விட்டு வறுத்து துழாவி வைத்துக் கொள்ளவும். பிறகு கல்வத்திலிட்டு  மேலுமந்த பசுநெய்விட்டு அரைத்து தந்தச் சிமிழில் வைத்துக் கொள்ளவும். குருவை நினைத்து தியானம் செய்து வெற்றிலையில் தடவி பார்க்க வெகு தூரமுள்ள செய்தியானது தோன்றும்.

                   பகிர்வில் ர.சடகோபால்.BA 




     

புதன், 26 நவம்பர், 2014

சிதம்பரம்


                      "பாவென்ற பஞ்சகர்த்தான் பாதம் போற்றி 
                  பண்பான பதினெண்பேர் பாதம் போற்றி" 

சிதம்பரம் திருக்கோவில் மானுட தத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. பஞ்ச சபைகளில்  கனகசபையான இத்தலம் பூலோக கைலாயமாகும். இத்தலம் நிலவுலகுக்கு நடுவான தலம். 
இறைவன் எப்போதும் திருநடனம் புரியும் தலம். சிவ கலைகள் ஆயிரமும் ஒடுங்கியிருக்கும் மூலஸ்தனம் இத்தலம் தான்.
உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களும் சென்று பின்னர் மீண்டும் பின் யாமத்தில் இங்கு வந்து இங்குள்ள மூலஸ்த்தனத்தில் ஒடுங்கும். எனவே தான் இத்தல இறைவன் மூலட்டான நாதர்  என பெயர் பெற்றார்.
இங்குள்ள ஒன்பது தங்க கலசங்கள் நவ சக்திகளை குறிக்கும். ஆடல் வல்லான் எழுந்தருளியுள்ள கொலு மண்டபத்தில் உள்ள நான்கு தூண்கள் நான் மறைகளின் சின்னமாகும். அதற்கு சற்று முன்புள்ள ஆறு தூண்கள் உள்ள மண்டபம் ஆறு சாஸ்திரங்களின் சின்னமாகும். அதற்க்கு வெளியே உள்ள 18 தூண்கள்  பதினெண் புராணங்களின் சின்னமாகும்.
நடராஜர் அருகில் செல்ல உள்ள 5 வெள்ளி படிகள் ஐம்போறிகளைக் குறிப்பதாகும் . இந்த ஐந்துபடிகள் சிவனின் பஞ்சாட்சரத்தின் சின்னமாகும். 

மனிதன் ஒரு நாளில் விடும் சுவாசம் 21,600 ஆகும்.  இங்கு வேயப்பட்டுள்ள ஓடுகள் 21,600 ஆகும்.  சுவாச சஞ்சாரத்திற்க்கு   ஆதரவான நாடிகள் 72,000 ஆகும்.  இங்கு 72,000 ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. 

   பிரம்ம பீடத்தில் உள்ள 10 தூண்கள் 6 சாஸ்திரத்தையும் 4 வேதங்களையும் குறிக்கும்.
இவ்வாறாக இத்தலம் மானுட உடலமைப்பினை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 
  பஞ்ச பூதத் தலங்களுள் எல்லா பூதங்களும் தோன்றி இறுதியில் ஒடுங்கும் 
ஆகாசத் திருத்தலமாக இத்தலம் விளங்குகிறது.......

                 பகிர்வில் ர.சடகோபால்.BA  

அகத்தியர் சொல்லும் வேம்பின் பெருமை


பொதுவாகவே வேப்ப மரத்தின் அரும் பெரும் குணங்கள் தற்போது பலருக்கு தெரியாது. அப்படித் தெரிந்தாலும் அது அம்மரத்தைப் பற்றிய பொதுவான குணமாகவே இருக்கும்.


வேம்பைப் பற்றி அகத்தியர் இயற்றிய நூல்களில் தத்துவம் முன்னூறு என்ற நூலில் மூன்றாவது ஞானகாண்டத்தில் வேம்பின் பெருமையை மிக அழகாகக் கூறுகிறார்.

“பாரப்பா வேம்பினூட பிறப்பைக் கேளு
பணியனையன் பாலாழி யமுர்தம் தனை
நேரப்பா பெண்ணுருவாய் தேவர்க்குப் படைத்தார்
நிகரில்லா ராட்சதர்கள் பெண்ணைப் பார்த்து
சாரப்பா மயங்கி நின்ற ரசுரர்ககளி லொருவன்
தானவர்கள் பந்தியிலே வந் திருந்த தாலே
சேரப்பா தேவருடன் கலந்திருந்த தாலே
திருமாலு மூன்றகப்பை படைத்தான் கேளே.”

விளக்கம் :-

வேம்பின் பிறப்பைப் பற்றிக் கூறுகிறேன் கேளு, திருமால் பெண்ணுருவம் கொண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு அகப்பையினால் பங்கிடும் போது, அசுரர்கள் அந்தப் பெண்ணின் அழகைக் கண்டு மயங்கி இருக்கையில், அசுரர்களில் ஒருவன் யாருக்கும் தெரியாமல் தேவர்கள் பந்தியில் வந்து அமர்ந்துவிட, திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கும் மூன்றகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார்.
“படைத்திட்ட பெருமாலாம் பெண்ணி னோடு
பருதி மதி யசுரனவ ரென்ற போது
உடைத்திட்ட அசுரனவன் னமுர்த முண்ண
ஓரடியா யாகப்பையினால் வெட்டினார் மால்
படைத்திட்ட யிரண்டாகி ரவி மதிக்கு
பகையாகி ராகுகே துக்களேன்றே சர்ப்பமானார்
அடைத்திட்ட அகப்பையினால் வெட்டும் போது
அவன்வா யாலமுர்த்த மாதைக் கக்கி னானே.”


விளக்கம் :-

அமிர்தத்தை கொடுத்த திருமாலுக்கு அருகிலிருந்த சூரியனும், சந்திரனும், அவன் அசுரன் என்று ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டு இருந்த அசுரனை நோக்கித் திருமால் அகப்பையால் வெட்டி விட, அசுரன் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு, அடையாளம் காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களுக்கு பகைக் கிரகமான ராகு, கேது என மாறினார்கள்.

அகப்பையினால் வெட்டுப்படும் போது அசுரன் தனது வாயில் மீதமாக இருந்த அமிர்தத்தைக் கக்கினான்.

“கக்கும்போ தமூர் தமது லிங்கம், போலக்
காசினியில் விழுந்ததுவே வேம்பு மாச்சு
முக்கியமாய்க் கசப்பு வந்த தேதென்றாகால்
முனையசுரன் வாயில் நின்று வீழ்ந்ததாலே
சக்கியமாய் வேம்பு தின்றால் சாவோ யில்லை
சனகாதி நால்வருடன் யானுந் தின்று
அக்கண மேசித்திபெற் றவேம்பு நேர்மை
ஆரறிவா ருலகத்தோ ரறியார் காணே.”

விளக்கம் :-

கக்கும்போது அசுரனின் வாயிலிருந்து பூமியில் விழுந்த அமிர்தமானது வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச்சுவை வந்த காரணம் என்ன வென்றால், அசுரனின் (பாம்பின்) நச்சு வாயிலிருந்து வெளிப்பட்டதால் தான். அப்படிப் பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு சாவு என்பதே கிடையாது. இப்படிதான் சனகாதி நால்வருடன் ( என் குருமார்கள் நால்வருடன்) சேர்ந்து நானும் சாப்பிட்டு காயசித்தி பெற்றேன். இப்படிப்பட்ட வேம்பின் பெருமையை இந்த உலகத்தில் யார் அறிவார் என்று மிகதெளிவாக வேம்பின் பெருமையை அகத்தியர் தெளிவுபடக் கூறுகிறார்.

காயசித்தி :- 

                            காயம் என்றால் உடம்பு சித்தி என்றால் சித்திக்கும்,  ஆகவே,    அழிவில்லா உடல் சித்திக்கும் என்று பொருள்.


                             பகிர்வில் ர.சடகோபால்.BA

புதன், 19 நவம்பர், 2014

ஈசான முகம்

"ஈசான முகம்" என்பது சிவனின் ஐந்து முகங்களில் ஒரு முகமாகும் 

உண்மையின்னஞ் சொல்லுகிறோம் ஆகிர்ஷணந்தான் 
 உத்தமனே சிதம்பரத்தின் ரூபமாகும் 
வன்மையுறும் ராசியும் சிவாயநமா வென்று 
 வாட்டவே உற்பனஞ்சேர் ஈசானங்கள் உண்டாம் 
தன்மைமிகு ஆங்சிவ சிவாய அவ்வுமோதில் 
 தவறாத பிரசாத சுந்தரரை காணலாமே 
                                                                                      -கருவூரார் 

"ஆகர்ஷணம் என்பது சிதம்பரத்தின் உருவமாகும் "

பொருள்:
                சிவாயநமா -  ஈசானங்கள் உண்டாகும் 
                ஆங்சிவ சிவாய - பிரசாத சுந்தரரைக் காணலாகும் 
(பிரசாத சுந்தரர் -சிவ வடிவில் ஒன்று )

             பகிர்வில் ர.சடகோபால்.BA  

வியாழன், 13 நவம்பர், 2014

கார்த்திகை வீரியார்ச்சுன மந்திரம்


அருளாலே ஓம் ஆம் ஸ்ரீயுங் கிலியும் 
 அரிய கார்த்திகை வீரியார்ச்சுன சுவாகா வென்று 
பொருளாக லக்ஷமுரு செபித்து தீரு 
 பொங்கமாய்த் தர்ப்பணமு மோமமன்னம் 
மருளாக பூசையது பத்துஞ்செய் நீ 
 மைந்தனே சித்திக்கக் கிரிகையாகுஞ் 
சுருளாக நினைத்தபடி எல்லாஞ் செய்யுஞ் 
 சுகமான போகருட கடாஷந் தானே 
                                                                              -புலிப்பாணி சித்தர் 
பொருள் :
                    "ஓம் ஆம் ஸ்ரீம் கிலியும் அரிய கார்த்திகை வீரியார்ச்சுன சுவாஹா" 
என்று லக்ஷமுரு ஜெபித்து தர்ப்பணம் முதலிய பத்து பூஜைகள் செய்து வந்தால் சித்தியாய் முடியும். நீ நினைத்தபடி எல்லாஞ் செய்யும். இது போகருட கடாஷத்தாலே புலிப்பாணியாகிய நான் உனக்கு சொல்கிறேன்....

                         பகிர்வில் ர.சடகோபால்.BA   

புதன், 12 நவம்பர், 2014

விநாயகர் வசிய மூலிகை


வெள்ளெருக்கு செடிக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் சதுர்த்தி அல்லது பௌர்ணமி அல்லது தேய்பிறை  அன்று காப்பு கட்டி ஆணி வேர் ஆறாமல் எடுத்து வேருடன் ஒன்பது மிளகு சேர்த்து தாயத்தில் அடைத்து பூஜையில் வைத்து மந்திரம் ஜெபித்து கழுத்திலோ, அல்லது கையிலோ கட்ட எப்படிப் பட்ட எதிரிகளும் வசியமாகி நம் சொற்படி நடப்பார்கள். வியாபாரம், தொழில் விருத்தி உண்டாகும். விநாயகர் வசியம் உண்டாகும்.
மந்திரம்:
               " ஓம் கம் கணபதயே வக்ர துண்டாய ஹீம் சுவாகா"

                         பகிர்வில் ர.சடகோபால்.BA 

செவ்வாய், 11 நவம்பர், 2014

சகல வித்யா யட்சணி மஹா மந்திரம்

  சகல வித்யா யட்சணி மஹா மந்திரம் 

மூல மந்திரம்:
                              " ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் வாக்கு வாகினி வாகிஸ்பரி ஐம் கிலிம்                                          சவ்வும்  மமவாக் சித்தம் குருகுரு சுவாகா".

இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 21-நாட்கள் செபம் செய்ய வேண்டும்.

பூசை முறை: 

பால்,தேன்,மல்லிகை,புஷ்பம்,சந்தனம்,பத்தி,சூடம்,தேங்காய்,வடை,
சுண்டல் முதலியன வைத்து தீபதூபம் காட்டி செபம் செய்தால் மந்திரம் சித்தியாகும்.இதனால் தேவி தரிசனம் உண்டாகும்.அத்தேவி நம் நாக்கில் அட்சரம் எழுதும் இதனால் தானே பாடும் சக்தியும், சகல வியாகரணமும் உண்டாகும்,வேதாந்த இரகசியமும், சகல கலைஞானமும் வெளிப்படும், கவிதா சத்தியும்,வாக்கு சித்தியும் உண்டாகும் என்கிறது மலையாள மாந்திரிகம்...

                       பகிர்வில் ர.சடகோபால்.BA 

தன ரதிப்ரியா யட்சணி

தன ரதிப் பிரியா யட்சணி மஹா மந்திரம் 


கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் 30 நாட்கள் ஜெபிக்க 30 ம் நாள் தன ரதிப்பிரியா யட்சணி பிரசன்னமாகும்.

மூல மந்திரம்:
                            "ஓம் ரம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம் தம் தனதே ரதிப்ரியே சுவாகா"
பூஜை முறைகள் :
                              பால்,பழம்,இனிப்பு வகைகள், தேங்காய்,வெற்றிலைப்பாக்கு முதலியன வைத்து செவ்வரளி புஷ்பத்தால் ஜெபம் செய்ய வேண்டும்.

இதன் பயன்:
                             திரிகாலமும் சொல்லும், மறைமுகமாக தனம் கொடுக்கும், சர்வ வியாதிகளுக்கும் விபூதி மந்திரித்து கொடுக்க குணமாகும். சர்வ சௌபாக்கியம் உண்டாகும் .

                 பகிர்வில் ர.சடகோபால்.BA  

திங்கள், 10 நவம்பர், 2014

மோகினி தேவதை வசிய மஹா மந்திரம்


மோகினி என்பவர்கள் இந்திரன் சபையில் உள்ள நல்ல தேவதைகள். மோகினியை சித்தி செய்தவர்களுக்கு வசியம்,மோகனம் முதலியவை சித்தியாகும். பிறரை எளிதில் கவரக் கூடியவராக விளங்குவார்கள்.

கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் 15 நாட்கள் ஜெபம் செய்ய சித்தியாகும்.

மூலமந்திரம்:
                          "ஹரி ஓம் ஸ்ரீம் றியும் சர்வலோக மோகினி வா வா  ஐயும் க்லீம் சிவ சிவ மோகினி நசி நசி மசி மசி சுவாகா"
பூஜை முறைகள் :
                              பௌர்ணமியில் ஆரம்பித்து அமாவாசையில் முடிக்க வேண்டும்.  பால்,பழம் கற்கண்டு, வெற்றிலைப்பாக்கு, தேங்காய், முதலியன வைத்து பூஜை செய்ய வேண்டும். மல்லிகை மலரால் பூஜித்து, வாசனை திரவியம் வைத்து மோகினியை தியானம் செய்ய வேண்டும். 15 ம் நாள் இரவு மோகினி தேவதை ஓர் அழகிய பெண் உருவத்தில் வந்து நிற்கும். உடனே பணிந்து தாயே என்று வணங்கி நான் அழைக்கும் பொழுது வந்து எனக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என கேட்க வேண்டும் 
          பிறகு மோகினி தேவதை சிரித்து விட்டு மறைந்து விடும். அப்படி சிரித்து விட்டு மறைந்தால் உனது வேண்டுதலை ஏற்று கொண்டதாக அர்த்தம்.

குறிப்பு:
               மோகினிக்குரிய யந்திரம், மை,மூலிகை, கண்டிப்பாக வைக்க வேண்டும் 

                    பகிர்வில் ர.சடகோபால்.BA         

ஞாயிறு, 9 நவம்பர், 2014

ஸ்ரீ-வராஹி மஹா மந்திரம்


வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். மாந்திரிகத்தில் ஓர் அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவள் வராஹி. வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. தன் பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும்  தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.


மூல மந்திரம்:
                           "ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா"

பூஜை முறைகள்:
                            வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை  செய்ய வேண்டும்.

இதன் பலன்:
                          தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.

                       பகிர்வில் ர.சடகோபால்.BA 
                               

வியாழன், 6 நவம்பர், 2014

தெய்வ ஆகர்ஷணம்

ஆகர்ஷணம் என்பது அழைப்பது என்பதாகும் 

சுருதியாய் சிறுமுன்னை வேரை வாங்கச் 
 சுரோணிதஞ்சேர் குக்குடமே பலிகொடுத்துச் 
சோமனுட கிரகணத்தில் தியனாங்கேளே 
 கேள் சர்வ ஆக்ரூசணி சுவாகா வென்று 
கிரக்கிச்சு நிழலுலர்த்தித் தூளாயாட்டி 
 வேளப்பா வெள்ளெருக்கம் பஞ்சில்வைத்து 
விளக்கேற்றி வைத்திருக்க பார்த்த தெய்வம் 
 வாளுயர்ந்த வாகனமும் ஏறிக்கொண்டு 
வந்து நிற்கும் உன்முன்னே மைந்தாபாரு
 சூழவே யார்வந்து பார்த்தலுந்தான் 
தோற்றுமடா அவரவர்கள் முன்னேதானே 
                                                                              - கருவூரார் 

பொருள்:
                       சிறுமுன்னை செடிக்கு சந்திர கிரகணத்தில் கோழி பலி கொடுத்து    "சர்வ ஆக்ருஷ்ணி சுவாகா" என்று மந்திரம் சொல்லி வேரை எடுத்து நிழலிளுலர்த்தித் தூள் செய்து, வெள்ளெருக்கம் பஞ்சில் வைத்துத் திரி செய்து விளக்கேற்றி பார்க்க, நினைத்த தெய்வம் தனது வாகனத்துடன் கண்ணுக்கு தோன்றும்,வேறு நபர் பார்த்தாலும் அவ்வாறு காட்சி தெரியும் 

              பகிர்வில் ர.சடகோபால்.BA  

செவ்வாய், 4 நவம்பர், 2014

சர்வ வசியம்

தேனாம் வெள்ளி ஞாயிறதில்
 திங்கள் வியாழம் நெய்யாகும் 
பானாம் செவ்வாய் புதன் பாலாம் 
 பகரு முடவன் நீராகும் 
ஆனால் ஆவின் புல்லுருவி 
 அதிலே குழைத்துத் திலர்த்தமிட 
வானோ ரெல்லாம் வசமாவார் 
 மண்ணில் சர்வ வசியமிதே 
                                                            - அகத்தியர் 

பொருள்:
                   ஆவின் புல்லுருவிக்கு காப்புக்கட்டிக் கொண்டு வந்து மோகன மந்திரத்தை லட்சம் உரு ஜெபித்து  வெள்ளிக் கிழமை,ஞாயிற்றுக் கிழமை  தேனிலும்; திங்கட் கிழமை,வியாழக் கிழமை நெய்யிலும்; செவ்வாய்,புதன், காராவின் பாலிலும்; சனிக்கிழமை நீரிலும்  குழைத்து திலர்த்தமிட , இப்பூவுலகில் சர்வ ஜனங்களும், விண்ணுலக தேவர்களும் வசியமாவார்கள்.

குறிப்பு:
                      ஆவின் புல்லுருவி என்பது  ஆலமரத்து புல்லுருவியாகும் .

மோகன மந்திரம்:
                       "ஓம் கிலியும் சவ்வும் றியும் ஸ்ரீயும் ஐயும் ஒம்சங்  மசிவயந  மோஹனாய சுவாகா"


                      பகிர்வில் ர.சடகோபால்.BA      

ஞாயிறு, 2 நவம்பர், 2014

அனுராஹினி யட்சணி மஹா மந்திரம்

அனுராஹினி யட்சணிக்குரிய யந்திரம்,மை,மூலிகை, வைத்து பூஜை செய்ய வேண்டும் .


கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு 21 நாட்கள் ஜெபிக்க அனுராஹினி யட்சணி தேவி பிரசன்னமாகும்.

மூல மந்திரம் :

                         "ஓம் ஹிரீம்  அனுராஹினி  மைதுன ப்ரியே ஸ்வாஹா"

நிவேதனம் :
                          தேங்காய்,பழம்,வெற்றிலைப்பாக்கு, பால், பழவகைகள், முதலியன வைத்து யட்சணிக்குரிய மூலிகையை வெள்ளி தாயத்தில் அடைத்து வைத்து நெய் விளக்கு ஏற்றி ஜெபம் செய்ய வேண்டும்.

இதன் பயன்:
                          திரிகாலமும் சொல்லும், மறைமுகமாக தனம் கொடுக்கும், 
ஓர் இடத்தில் இருக்கும் பொருளை நாம் தொட்டு விட்டு வந்தால்  அந்த பொருள் அன்று இரவு நம்மிடம் கொண்டு வந்து கொடுக்கும். எட்டு வகையான ஆகார்ஷணம் சித்தி ஆகும்.

குறிப்பு:
               நான் இங்கு மந்திரம் மட்டுமே கூறியிருக்கிறேன். இதற்க்கான மை,மூலிகை, யந்திரம் எதுவும் கூறவில்லை.  தவறாக ஜெபம் செய்தால்  கடும் ஆபத்திற்கு உள்ளாகும் என்பதை கவனம் கொள்ள வேண்டும் ..

           பகிர்வில் ர.சடகோபால்.BA 

சனி, 1 நவம்பர், 2014

ஸ்ரீ நாக கன்னிகா வசிய மந்திரம்

ஸ்ரீ நாக கன்னிகா  என்பது தேவலோகத்தில் உள்ள நல்ல தேவதைகளாகும் 

கீழ் கண்ட மந்திரத்தை 1008உரு 18 நாட்கள் ஜெபிக்க சித்தியாகும் 


மூல மந்திரம்:
                         "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸெளம் நமோ பகவதி நாகலோக வாசினி சர்வ விசும் நாஸயம் நாஸய பீம் பீம் ஹ்ரீம் ஹும் பட் ஸ்வாகா"  

நிவேதனம்:
                         பால்,பழவகைகள்,தேன்,கற்கண்டு,லட்டு,தேங்காய்,வெற்றிலைப்பாக்கு  முதலியன வைத்து மல்லிகை மலரால் அலங்கரித்து பூஜை வைக்கவும் 

இதன் பயன்:
                          குறி சொல்லலாம், சுப காரியங்கள் நடத்திக் கொடுக்கும், 

குறிப்பு:
                ஸ்ரீ-நாக கன்னிகா  யந்திரம், மை, மூலிகை  கண்டிப்பாக வைத்து பூஜை செய்தால் தான் சித்தி ஆகும்.

      பகிர்வில்.ர.சடகோபால்.BA 

ஸ்வர்ணரேகா யட்சணி


யட்சணிக்குரிய யந்திரத்தை வைத்து 22 தினம் 1008 உரு ஜெபிக்க தேவி தரிஷனம் கிடைக்கும்



நிவேதனம்:
பால்,பழம்,தேங்காய்,அதிரசம்,அப்பம்,தேன்,கற்கண்டு இவைகளை படையலாக வைத்து கீழ் கண்ட மந்திரத்தை முறைப்படி ஜெபம் செய்ய வேண்டும் . 

மூல மந்திரம்:

"ஓம் ஸகம் ஸகம் சால்மல ஸ்வர்ணரேகா ஸ்வாஹா"

இதன் பயன்:
தேவி தரிஷனம் கிடைத்தவுடன், நாம் வேண்டும் பொழுது தேவி பிரசன்னமாகி நமக்கு வேண்டிய உதவிகளை செய்யும், திரிகாலமும் சொல்லும், மூலிகை,அஞ்சனம், பற்றி தெரிந்துகொள்ளலாம். இன்னும் பல அற்புதமான காரியங்கள் செய்யும். புதையல் எடுக்க உதவும்.

குறிப்பு :
யட்சணிக்குரிய மூலிகை,மை,யந்திரம், எதுவும் நான் இங்கு குறிப்பிடவில்லை, முறையாக செய்யவில்லை என்றால் கடும் ஆபத்திற்கு உள்ளாகும் என்பதை கவனம் கொள்ள வேண்டும்.

          பகிர்வில் ர .சடகோபால்.BA 

திங்கள், 27 அக்டோபர், 2014

அன்பே சிவம்


அன்பும் சிவமும் வேறென்பார் அறிவிலார்
அன்பேசிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே


என்பார் திருமூலர்.

                

அவற்றை நான் அனுபவிக்கும் முன்பாக எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக இருக்கிற இறைவனின் கருணையைக்காண்போம்

ஆதிகாலத்தில் ஜனகாதி முனிவர்கள் சிவபிரானை சந்தித்து ஒரு முக்கிய சந்தேகத்துக்கு விடை கேட்டனர்.

அதாவது ஆன்மாக்கள் இறைவனின் திருவடியை அடைய சரியான வழி எது என்பதில் எங்களுக்குள் சர்ச்சை இருக்கிறது தாங்கள்தான் அதனை விளக்க வேண்டும்
என்றனர்

அப்போது சிவபிரான் ஒரு மரத்தடியில் அமர்ந்து யோக நிலையில் மௌனமாக வலக்கை விரல்களால் அடையாளம் காட்டினார்.

இந்த சிவ ஸ்வரூபத்தில்தான் அவர் தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

அவர் காட்டிய அடையாளம் என்னதெரியுமா
அதுவே சின்முத்திரை!

சிவாலயங்களில் சின்முத்திரையுடன் கூடிய தட்சிணாமுர்த்தியை நாம் காணலாம். அவர் காட்டும் சின்முத்திரை என்பது
கட்டைவிரலில் ஆள்காட்டிவிரல் வளைத்து ஒரு வளையம் போல இணைந்திருக்கும் மற்ற மூன்றுவிரல்கள் மேல் நோக்கி நிமிர்ந்திருக்கும்.

எல்லாம் நம்கைக்குள்ளே என்று பெரியவர்கள் சொல்வது இதைத்தான்!


கட்டைவிரல் என்பது கடவுள் அது எந்தக்கடவுளாக இருந்தாலும் சரி
ஆள்காட்டிவிரல் என்பது ஆன்மா
அதாவது ஆன்மாவைத் தாங்கி இருக்கிற மனிதன் ஏதாவது ஒருபிறவியில் இறைவனது திருவடியை அடைய வேண்டும். அதனால்தான் ஆன்மாவுக்கு அடையாளமான ஆட்காட்டிவிரல்
வளைந்து கட்டைவிரலோடு இணைந்திருக்கிற சின்முத்திரைக்காட்சி.

ஆனால் நமது விரல் அமைப்பில் கட்டைவிரல் தனித்து நிற்கிறது ஆள்காட்டிவிரல் மற்ற மூன்றுவிரலக்ளோடு இணைந்திருக்கிறது. அதாவது இறைவனோடு(கட்டைவிரல்) இணையாமல் இருக்கிறது.

மனிதனுக்கு உலக வாழ்க்கை என்ற ஆசையைக்காட்டி கடவுளைப்பற்றி சிந்திக்க விடாமல் தடுத்துக்கொண்டிருப்பதுமூன்றுவிரல்கள்தான்.

அதாவது ஆணவம் தலைக்கனம் ஈகோ என்பவைகள்( எல்லாம் ஒரே அம்சம்தான்!)

ஓர் அறிஞர் சொன்னார்..

திறந்தே கிடக்கும் கோயிலுக்குள் ஆட்களே இருப்பதில்லை, மூடியே இருக்கும் சிறைச்சாலைக்குள் எப்போதும் ஆட்கள் இருக்கிறார்கள்.


தீப்பெட்டியும் தீக்குச்சியும் ஒருநாள்பேசிக்கொண்டதாம்..

நாம் இருவரும் உரசிக்கொள்கிறோம் ஆனால் நான்மட்டுமே தீப்பிடிக்கக்காரணம் என்ன என்றுகேட்டதாம் தீக்குச்சி

அதற்கு தீப்பெட்டி சொல்லியதாம்..

உன் தலைக்கனம்தான் காரணம் உன்னை இத்தனை நாள் பத்திரமாய் வைத்திருந்த என்னை நீ வெளியே வந்ததும் உரசுகிறாயே பாதுகாததவர்களைப் பதம் பார்த்தால் அழிவுதான் வரும்!


ஆகவே நம்மிடம் அகங்காரம் ஒழிய வேண்டும்

கிறிஸ்துவ மதத்தில் சிலுவைஅதைத்தான் சொல்கிறது ஆங்கில \\ Iஅதாவது நான் இந்த அகந்தைபோகவேண்டுமானால் க்ராஸ்(+) செய்யவேண்டும் ஆணவம் அழிதலே சிலுவையின் அடையாளம்

இஸ்லாம்மததிலும் நான் செய்கிறேன் என்று ஆணவத்தோடு பேசக்கூடாது இன்ஷா அல்லா என்றுதான் சொல்லவேண்டும்!

நாம் அனைவரும் அன்பினால் ஒருமைப்படுவோம்!

                 பகிர்வில் ர.சடகோபால்.BA 

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

சகல வசிய மை -லோக வசியம்

வெண் குன்றிமணி                    வெள்ளைச் சாரணை 
வெள்ளெருக்கு                            வெள்ளை விஷ்ணுகிராந்தி 

இவைகளை முறைப்படி காப்பு கட்டி, சாபம் போக்கி ஆணிவேர் ஆறாமல் தோண்டி எடுத்து, உலர்த்தி தீயில் கருக்கி பத்திரப்படுத்தவும்.

கருங்குருவி பிச்சு கண்            கரிச்சான் பிச்சு கண் 
கரும்பூனை பிச்சு கண்              கருநாய் பிச்சு கண் 

இவைகளை எடுத்து உலர்த்தி வைத்துக் கொண்டு புனுகு,கோரோசனம்,பச்சைக்கற்பூரம்,குங்குமப்பூ, கஸ்தூரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி எடை எடுத்து சேர்த்து, வல்லூறு தைலம் விட்டு இரண்டு சாமம் அரைத்து கொம்பு சிமிழில் பத்திரப்படுத்தவும்.

இதற்கு பூஜை மந்திரம்:
                                              "ஓம் ஹ்ரீம் நமோ பகவதி உச்சிஸ்ட சண்டாளினி சர்வலோகம் தஸமானய சுவாக"

இந்த மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் 11 நாட்கள் ஜெபம் செய்ய மை உயிர் பெறும் .
இதை தேவை படும் பொழுது நெற்றியில் இட்டுக்கொள்ள சகல வசியம்{எறும்பு முதல் தாவரம்,மனிதர்கள்,மிருகம், என அனைத்தும் வசியமாகும்}

                   பகிர்வில் ர.சடகோபால்.BA  

வியாழன், 23 அக்டோபர், 2014

விஷ்ணு கிரந்தி


திறமாக முறையின்ன சொல்லக் கேளு 
 திருமால் தன் மூலியிலே மூலம் வாங்கித் 
திறமாக ஓடுகின்ற செலத்தில் நின்று 
 தேவிதனை  நினைத்துக் கொண்டு வேருரைத்துத் 
திறமாக கொண்டு போய் கண்ணும் நெற்றி 
  சேந்தக்கரம் புறமுகம் தேய்த்துக்கொண்டு 
திறமாக பார்த்திடவே விஷ்ணுலோகச் 
  சேதியெல்லாம் வகைவகையாய் செப்புவாரே 
                                                                                 -கருவூரார் பலத்திரட்டு 

பொருள்:
                  விஷ்ணு கிரந்தியின் வேரை எடுத்து ஓடுகின்ற தண்ணீரில் நின்று அஞ்சனா தேவியை நினைத்து விஷ்ணுகிரந்தியின் வேரை  உரைத்து, கண்,நெற்றி,கைகள்,முகம் முதலியவற்றில் தேய்த்து கொண்டு பார்க்க விஷ்ணுலோக செய்திகளை அங்கு நடப்பவைகளை எல்லாம் தெளிவாக காணலாகும்.

                   பகிர்வில் ர.சடகோபால்.BA  

தற்புருட முகம்


பார்த்திட்ட தற்புருசம் இருபத் தஞ்சும்
 பாடுகிறேன் நமசிவ அகோரமாகும் 
சேர்த்துயிது சேவிக்க உச்சாடனமாகும் 
 சிவமான சௌமியத்தை சேவிக்கேளு 
காத்திட்ட அங்சிவாய  நமா வென்றால் 
 காதலித்த புத்திரரைக் கொடுக்குங்காணும்
ஏத்திடவும் அங் உங் வங் சிவாயா நமா வென்றால் 
  இயல்பான தேகத்தில் நோய்கள் தீருங்காணே 
                                                                                                -கருவூரார் பலத்திரட்டு 

பொருள்:
                    "நமசிவ"  என்ற அகோர மந்திரத்தை தொடர்ந்து சொல்லி கொண்டு வர உச்சாடனமாகும்.
                    
                    "அங் சிவாய நமா"  என்று மந்திரம் சொல்லி கொண்டுவர  வேண்டியபடி குழந்தை பாக்கியம் உண்டாகும் .

                    "அங் உங் வங் சிவாய நமா" என்று மந்திரம் சொல்லிக்கொண்டு வர உடலில் உள்ள நோய்கள் குணமாகும்.     


                            பகிர்வில் ர. சடகோபால்.BA 

செவ்வாய், 21 அக்டோபர், 2014

மூலிகை சாப நிவர்த்தி

மூலிகை சாப நிவர்த்தி செய்யும் முறை- கருவூரார் 

மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து, பொங்கல் வைத்து, அதன் முன் வாழை இலையில் தேங்காய்,பழம்,வெற்றிலை பாக்கு,வத்தி சூடம் இவைகளை வைத்து தூப தீபம் காட்டி கீழ் கண்ட மந்திரத்தை 108 உரு கொடுக்கவும். 

"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸௌம் சிவயநம ப்ரஹ்ம நாரத தேவமுனி கணசாபம் நாஸய நாஸ ஸ்வாஹா."

மஞ்சள் நூலால்  காப்பு கட்டினவுடன் ஒரு எலுமிச்சம்பழம் அறுத்து அதை மூன்று சுற்று சுற்றி எறிந்து விட்டு, வேர் எடுக்க வேண்டும். வேர் எடுக்கும் போது ஆணிவேர் ஆறாமேல் வேர் எடுக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தான் மூலிகை எடுக்க உரிய நாள். 
 இவ்விதம் காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து எடுத்தால் தான்  மூலிகை நூலில் சொன்ன பலன்  தரும். 
விநாயகர் பூஜை அவசியம் செய்ய வேண்டும்.

                  பகிர்வில் ர.சடகோபால்.BA  

திங்கள், 20 அக்டோபர், 2014

மாரணம்

மாரணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

அஷ்ட கர்மங்களில் எட்டாவதாக சொல்லப்படுவது மாரணமாகும்.
இது தனக்கும் தன்னைச்சார்ந்தவர்க்கும் வேண்டாத அல்லது கேடு
விளைவிப்பவைகளை மாரணிக்க(அழிக்க)செய்வதாகும்.
மாரணத்தின் அதிதேவதை எமன் ஆவார்.
மாரணம் எட்டுவகைப்படும். அவை

1)சர்வ மாரணம்
2)அரச மாரணம்
3)சத்துரு மாரணம்
4)சர்வபூத மாரணம்
5)சர்வஜீவஜெந்து மாரணம்
6)சர்வவிஷ மாரணம்
7)சர்வதேவ மாரணம்
8)சர்வரிஷி மாரணம் என்பதாகும்.

மாரணம் எட்டுக்கும் மந்திரம்

ஆமப்பா பேதனத்தை நன்றாய்ச் சொன்னேன்
 அரகரா மாரணத்தினருமை கேளு
தாமப்பா சொல்கிறே மந்திரசித்து
 தனதாக ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங்
பிறீங் பிறீங் பிறீங் சுவாகாவென்று
 ஓமப்பா ஒருமனதாய்ச் செபிக்கக்கேளு
உறுதியுடன் சூலமிட்டு அடியிலேதான்
 நாமப்பா சொல்லுகிறோங் கம்மென்றேதான்
நாட்டமுடன் தானெழுதி நயனம்பாரே.

பாரப்பா நயனமென்ற சூலந்தன்னை
 பத்தியுடன் மானதமாய் பூசைபண்ணி
காரப்பா மந்திரத்தைத் தினம் நூறாக
 கண்ணார உருச்செபித்து கருணையானால்
நேரப்பா மாரணந்தா னிமிஷத்துள்ளே
 நினைத்தபடி நின்றுவிளையாடும் பாரே
தேரப்பா மனந்தேறி யறிவில்நின்று
 சிவசிவா மாரணத்தைத் தீர்க்கம் பண்ணே.

தீர்க்கமுடன் மாரணந்தான் சித்தியானால்
 தெளிந்துகொண்டு தன்னுயிர்போல் செகத்தைப்பார்த்து
மார்க்கமுடன் சிவயோக வாழ்வில்நின்று
 மைந்தனே பூரணத்தை தினமும்நோக்கி
ஏர்க்கையுடன் தானிருக்க வேண்டுமானால்
 இடும்பாக மாரணத்தைச் செய்ய வேண்டாம்
ஆர்க்கும்வெகு கொடுமைகளைச் செய்தபேரை
 அப்போதே மாரணிக்க அந்தந்தானே.
                   -அகத்தியர் பரிபூரணம்1200
பொருள்:
முன்பு பேதனத்தைப்பற்றி சொன்னேன், அதற்கடுத்ததாக 
மாரணத்தைப் பற்றி சொல்கிறேன் கேள், 
ஒரு வெள்ளித்தகட்டில் சூலம் வரைத்து அச்சூலத்தின் 
அடிமுனையில் "கம்" என்று எழுதவும்.

பின்னர் ஒரு சனிக்கிழமை நாளில் உடல்மன சுத்தியுடன்
தூய்மையானஇடத்தில் கருமைநிற ஆடை அணிந்து தெற்கு
நோக்கி அத்திப்பலகையில்அமர்ந்து கொண்டு உன் எதிரில்
மேற்கூறியமாரண எந்திரத்தை வைத்து அதனைச்சுற்றி 
கடலை மலர்களை வைத்து அதன் எதிரில் வேப்பெண்ணெய் 
ஊற்றி விளக்கேற்றி வைத்து இதர பூசை பொருட்களையும் 
வைத்துக்கொண்டு மன ஓர்நிலையோடு 
"ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங் பிறீங் பிறீங் பிறீங் சுவாகா" 
வென்று நாளொன்றுக்கு 108 உரு வீதம் 48 நாட்கள் செபிக்க 
மாரணம் சித்தியாகும்.

மாரணம் சித்தியானால் தனக்கு வேண்டாத மனிதர், துன்பம் 
செய்யும் விலங்கு, தீராத நோய்,தீங்கிலைக்கும் துஷ்ட தேவதைகள்,
அரச பதவியில் இருந்து கேடு செய்யும் பாவிகள் என யாவரையும்
அழித்து விடலாம்.
மாரணத்தை சித்தி செய்து விட்டோம் என்பதற்க்காக நல்லவர்க்கு
அதை தவறான வழியில் பயன்படுத்தினால் பெரும் பாவத்திற்க்கும்
 சாபத்திற்க்கும் ஆளாக வேண்டிவரும்.ஆதலால் இம்மாரணத்தை
யாரிடம் பிரயோகிக்க வேண்டுமென்றால் யாவர்க்கும் அதிக கெடுதல்
செய்யும் பாவிகளிடமும், கொடுர விலங்குகளிடமும் பயன்படுத்தி
அவற்றை அழித்து உலக உயிர்களை தன்னுயிர் போல் எண்ணி
அவர்களுக்கு நன்மை செய்வதற்க்காக இதை பயன்படுத்த வேண்டும்.

மேலும் இதை பயன்படுத்து முறைகளை சொல்கிறேன் கேளுங்கள்,
மாரண சித்தி செய்த பின்னர் இந்த எந்திரத்தை வரைந்து 108 உரு
கொடுத்து விலங்குகள், துஷ்டதேவதைகள் நடமாடும் வீடு,
தோட்டங்களில் ஸ்தாபித்து விட்டால் அவ்விடத்தை அவைகள்
 நெருங்காது. அப்படி நெருங்கினாலும் சுருண்டு விழுந்து விடும்,
தீராத நோய்வாய்ப்பட்டவர்க்கு மேற்க்கூறிய யந்திரத்தை 
விபூதியில் வரைந்து 108 உருக்கொடுத்து அவ்விபூதியை அவர்கள் 
பூசியும் சிறிது உண்டும் வர சொல்லினால் அவர்களின் உடலில் 
உள்ள நோய்கள் நீங்கி விடும்.
உடலில் உள்ள விஷத்தன்மைகள் நீங்கவும் இம்மந்திரம் ஓதிய 
விபூதியை கொடுக்க சரியாகி விடும்.
உலக உயிர்களுக்கு கேடு செய்யும் பாவிகளை அவர்கள் அழிந்து 
போக வேண்டுமென எண்ணி இம்மாரண யந்திரத்தில் அவர்களின் 
பெயரை தலைமாற்றி எழுதி அதல் அவர்களின் காலடி மண் அல்லது 
முடி ஏதாவதொன்றை வைத்து சுருட்டி அவர்கள் நடமாடும் பகுதி 
அல்லது சுடுகட்டிலோ அதை புதைக்க அவர்களுக்கு மூச்சடைக்கும் 
உடலெல்லாம் எரியும் நிமிசத்தில் உயிர் பிறிந்து போகும்.
மேலும் சித்தகள் ரிஷிகள் தாங்கள் மறைந்து வைத்துள்ள புதையல் போன்றவற்றிக்கு மந்திரக்கட்டு
போட்டு இருப்பார்கள் அவர்களின் மந்திரக்கட்டை மாரணிக்க செய்து
அவைகளை நாம் அடைந்து விடலாம் இது ரிஷி மாரணமாகும் .
தீமை செய்யும் யாவரையும் அழிக்க வேண்டுமென்றால் உன் மூச்சை இழுத்தடக்கிக்கொண்டு இம்மந்திரத்தை மனதால் 3 முறை
செபித்தவாறு அவனை உற்று நோக்கினால் மதிமயக்கம் ஏற்ப்பட்டு
கிழே விழுந்து விடுவான் பின்னர் விழுந்தவன் எழவே மாட்டான்.
இவையெல்லாம் மாரணத்தின் ஆற்றலாகும் இதை நல்ல வழிக்கு
மட்டுமே பயன்படுத்த வேண்டும் இல்லாவிடில் கொடிய துன்பத்திற்க்கு ஆளாக நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.....


                                               பகிர்வில் ர.சடகோபால்.BA 

பேதனம்

பேதனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

அஷ்டகர்மங்களில் ஏழாவதாக சொல்லப்படுவது பேதனமாகும்.
பேதனத்தின் அதிதேவதை குபேரன் ஆவார். பேதனம் என்பது 
ஒருவரை தான் என்னசெய்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் 
அவரின் புத்தியை  பேதலிக்கச்செய்வதாகும்       . இதுவும்நோக்குவர்மத்தைப்போல் ஒருவகை 
தாக்குதல்தான். ஒருவரை பார்த்து இவண் பேதலிக்க வேண்டுமென 
எண்ணினால் அவன் பேதலித்துப்போய் விடுவான். 
இப்பேதனம் எட்டு வகைப்படும்.
அவை

1)சர்வ பேதனம்
2)இராஜ பேதனம்
3)புருஷ பேதனம்
4)ஸ்திரி பேதனம்
5)மிருக பேதனம்
6)தேவ பேதனம்
7)அக்கினி பேதனம்
8)லோக பேதனம் என்பனவாகும்.

பேதனத்தின் அதிதேவதை குபேரன்

பேதனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

பாரப்பா வித்துவே ஷணத்தைச் சொன்னேன்
  பத்தியுடன் பேதனத்தைப் பகரக்கேளு
மாரப்பா பேதனந்தானதீத வித்தை
 மக்களே ஓம்றீயுஞ்சவ்வும் ஸ்ரீயும் கிலியு
அங்அங் நசி நசி சுவாகாவென்று
 நிசமான யெண்கோணம் நன்றாய்க்கீறி
காரப்பா கோணம்நடு விந்துபோட்டு
 கமலநடு டங்கெனவே கனிவாய்ப்போடே.

போட்டெடுத்துச் சக்கரத்தை முன்னேவைத்து
 புத்தியுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
நாட்டமுடன் மந்திரத்தைத் தினம்நூறப்பா
 நன்மையுடனுருச் செபித்து நயனங்கண்டு
வாட்டமில்லா வாசியிலே நின்றாயானால்
 மகத்தான பேதனந்தான் மார்க்கமாக
காட்டும்முன்னே பேதலிக்குமந்திரசித்து
 கைகண்டவித்தையடா கனிந்துபாரே.
                      -அகத்தியர் பரிபூரணம்1200
பொருள்:

பேதனத்தைப் பற்றி செல்கிறேன் கேள், வித்தைகளில் பேதனம்தான் 
அதிக வித்தைகளை உள்ளடக்கியது. பேதனத்தை சித்தி செய்யும் 
முறை யாதெனில் ஒரு இரும்புத்தகட்டில் தாமரை இதழைப்போல 
எண்கோணம் வரைந்துஅதன் நடுவில் ஒரு வட்டம் போட்டு 
அவ்வட்டத்தினுல் "டங்" என்று எழுதவும்.

பின்னர் இச்சக்கரத்தை பன்னீரால் கழுவி இதன் நான்கு மூலையிலும் 
சந்தனம் குங்குமம் தொட்டு வைக்கவும்.பின்னர் இதை பூசை 
அறையில் வைத்து ஒரு வியாழக்கிழமை நாளில் உடல்மன சுத்தியுடன் 
வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து வடக்கு நோக்கி மரத்தோலாடையில்
அமர்ந்து கொண்டு ஊமத்தம் பூவால் இச்சக்கரத்தை அலங்கரித்து 
அதன் எதிரில் புன்னை எண்னெண்யை உற்றி விளக்கேற்றி வைத்து 
மன ஓர் நிலையோடு
 'ஓம் றீயும் சவ்வும் ஸ்ரீயும் கிலியும் அங்அங் நசிநசி சுவாகா' என்று 
நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபிக்க பேதனம் 
சித்தியாகும். 

பேதனம் சித்தியான பின்பு உனக்கு தேவைப்படும் சமயத்தில் இதை 
பிரயோகிக்க எண்ணினால் உன் மூச்சை நன்கு இழுத்தடக்கிக்கொண்டு இப்பேதனமந்திரத்தை 3 முறை மனதால் நினைத்தவாறு உன் எதிரில் 
இருப்பவர்களைப் பார்க்க அவர்கள் உன்னை கண்ட மாத்திரத்தில் 
பேதலித்து மிரண்டு ஓடிவிடுவார்கள் அல்லது அவர்களை நம் 
எண்ணப்படி செயல்படச்செய்யலாம் என்கிறார் அகத்தியர்.

                                பகிர்வில் ர.சடகோபால்.BA 

வித்துவேஷணம்

வித்துவேஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்


அஷ்ட கர்மங்களில் ஆறாவது கர்மமாக சொல்லப்படுவது 
வித்துவேஷணமாகும். வித்துவேஷணம் என்பது ஒருவருக்கொருவர் 
பகையை உண்டாக்கி பிரிப்பது இதனால் எப்படிப்பட்டவரையும் 
பிரித்து விடலாம். எது தனக்கு வேண்டாததோ அது தானாகத்தன்மேல் 
வெறுப்புற்று தன்னைவிட்டு ஓடிவிடும்படி செய்வதே
வித்துவேஷணமாகும். அதைப்பற்றி இன்றைய பதிவில் காண்போம்.
வித்துவேஷணம் எட்டு உட்பிரிவுகளைக்கொண்டதாகும், அவை

1)சர்வ வித்துவேஷணம்
2)இராஜ வித்துவேஷணம்
3)புருச வித்துவேஷணம்
4)ஸ்திரி வித்துவேஷணம்
5)மிருக வித்துவேஷணம்
6)தேவ வித்துவேஷணம்
7) லோக வித்துவேஷணம் என்பனவாகும். 

வித்துவேஷணத்தின் அதிதேவதை வாயு தேவன் ஆவார்.

வித்துவேஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

பாசமுடன் வித்துவேஷணத்தைக்கேளு
பதிவான மந்திரமிது சுத்தவித்தை
வாசமுள்ள வித்தையடா நேசமான மந்திரமிது
ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும் சர்வயிந்திராணிபகவதே சுவாகாவென்னே
எண்ணமுடன் மந்திரத்தை செபிக்குமார்க்கம்
இன்பமுடன் விபூதியிலே முக்கோணமிட்டு
கண்ணிறைந்த முக்கோண நடுவே விந்து
கருணைவளர் விந்துநடு ஓங்காரஞ்சாத்தி
முன்னிறைந்த ஓங்கார நடுவிலேதான்
முத்தியுடன் சுத்தமதாய் சிங்கென்றிட்டு
சன்னதியை நோக்கிமனத் தன்மையாலே
சங்கையுடன் மானதமாய்ப் பூசைசெய்யே.

செய்யடா மானதமாய்ப் பூசைபண்ண
சிந்தைமன தொன்றாக சிவனைநோக்கி
மெய்யடா மந்திரமிது தினம்நூறப்பா
விரும்பிமன மொன்றாக உருவேசெய்தால்
அய்யனே வித்துவேஷணந்தானெட்டும்
அரகரா தன்வசமா யடங்கியாடும்
மய்யமென்ற சுழிமுனையிலே அடங்கியாட
வரிசையிடனினைத்தபடி வாய்க்குந்தானே.
                                 -அகத்தியர் பரிபூரணம்1200
பொருள்:
ஒரு செய்வாய் கிழமை நாளில் உடல்மனசுத்தியுடன் சாம்பல்நிற 
பட்டாடை உடுத்தி எட்டிபலகையில் வடமேற்கு திசை நோக்கி 
அமர்ந்துகொண்டு உன் எதிரில் ஒரு எட்டிப்பலகையை வைத்து அதில் 
விபூதியை பரப்பி அவ்விபூதியில் முக்கோணம் போட்டு 
அம்முக்கோணத்தின் நடுவில் "ஓம்" என்று எழுதி அதனுள் "சிங்" என்று 
எழுதவும். பின்னர் பன்றி நெய் ஊற்றி விளக்கேற்றி வைத்து 
அதைச்சுற்றிலும் காக்கணம் மலர்களையும் ஏனைய 
பூசைப்பொருட்களையும் வைத்துக்கொண்டு மனஓர்நிலைப்பாட்டோடு
"ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும் சர்வயிந்திராணிபகவதே சுவாகா" என்ற 
மந்திரத்தை நாளொன்றுக்கு 100 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் 
வித்துவேஷணம் எட்டுக்கும் சித்தியாகும்.

பின்னர் இதை பயன்படுத்தவேண்டுமென்றால் உன் மூச்சை 
உள்நிறுத்தி இம்மந்திரத்தை 3 முறைசெபித்தால் உன் வழியில் 
குறுகிடும் அதிகார பலமுள்ளவர்கள், எதிரிகள், மிருகங்கள்,ஆண்கள்,
பெண்கள், பேய் பிசாசு, துஷ்ட தேவதைகள், ஜீவஜந்துக்கள் என 
அனைத்தும் உன்னை கண்ட மாத்திரத்தில்  மிரண்டு ஓடிவிடும். 
அது மதம் பிடித்த யானையாக இருந்தாலும்,
முரட்டு காளையாக இருந்தாலும் ஓடுவிடும்.
பிறர்க்கு இது பயன்படுவதற்கு முன்சொன்ன முறையில் மந்திரத்தை 
கையில் விபூதியை வைத்து செபித்து அவர்களுக்கு அவ்விபூதியை
பூசிக்கொள்ளும்படி கொடுக்கலாம். அவர்கள் அதை வயல்வெளியில் 
போட்டால் அங்கு எலிகள் வாராது. பிணியாளர்க்கு பூசினால் பிணி 
தீர்ந்துவிடும். இன்னும் பல பயன்கள் இதில் அடங்கியுள்ளன.

                                  பகிர்வில் ர.சடகோபால்.BA 

ஆக்ருஷணம்

ஆக்ருஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

அஷ்டகர்மங்களில் ஐந்தாவதாக சொல்லப்படுவது ஆக்ருஷணமாகும்,
ஆக்ருஷணம் என்றால் தன்னை நோக்கி இழுத்துக்கொள்ளுதல் 
என்று பொருள். எந்த ஒரு பொருளையும் சத்தியையும் 
ஆகர்க்ஷிக்கலாம்.  அதாவது மிருகம்,மனிதர்,தெய்வம் முதல் 
எதையும் நம்மை நோக்கி வரவழைப்பதே ஆக்ருஷணமாகும். 
ஆக்ருஷணம் எட்டு உட்பிரிவுகளைக் கொண்டது. அவை

1)சர்வ ஆக்ருஷணம்
2)பூத ஆக்ருஷணம்
3)இராஜ ஆக்ருஷணம்
4)புருஷ ஆக்ருஷணம்
5)ஸ்திரி ஆக்ருஷணம்
6)மிருக ஆக்ருஷணம்
7)தெய்வ ஆக்ருஷணம்
8)லோக ஆக்ருஷணம் என்பனவாகும்.
ஆக்ருஷணத்தின் தேவதை வருணன் ஆவார்.

ஆக்ருஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர் 

நோக்கமுடன் உச்சாடனத்தைச் சொன்னேன்மைந்தா
நுண்மையுடன் ஆக்ருஷணத்தி னுண்மைகேளு
பார்க்கமனக் கண்ணாலே நோக்கமாகி
பதிவாக ஓம்கிலியும் சவ்வும் றீயும் ஐயும்
நமோபகவதிதேவி டங்டங் சுவாகாவென்று
தீர்க்கமுடனுருவேறக் கருவைக்கேளு
சிவசிவா நவகோணநடுவில்விந்து
மகத்தான விந்துநடு ஓமென்றூணே

உண்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
பேணியந்த மந்திரத்தைத் தினம்நூறப்பா
பிரியமுடன் தினம் நூறுருவேசெய்தால்
காணுமந்த ஆக்கிருஷ்ணந்தான் சித்தியாகும்
கருணையுட னினைத்ததெல்லாங் காணுங்காணும்
வேணுமிந்த ஆக்கிருஷ்ணந்தான் உலகத்தோர்க்கு
வேண்டிமிகச் சொன்னதிந்த விவரம்பாரே.
                       -அகத்தியர் பரிபூரணம் 1200

பொருள்:
நீ தெரிந்து கொள்வதற்க்கா உச்சாடத்தை பற்றி சொன்னேன்,
அதற்கடுத்ததாக ஆக்கிருஷ்ணத்தை சொல்கிறேன் கேள்,
ஒரு வெள்ளிக்கிழமை நாளில் ஒரு தங்க தகட்டில் நவகோணம் 
போட்டு அதன் நடுவில்ஒரு வட்டம் போடவும் பின்னர் 
அவ்வட்ட்த்தினுள் "ஓம்" என்று எழுதவும். எழுதிய அந்த யந்திரத்தை
பூசையில் வைத்து அதை சுற்றி அரளி மலர்களால் அலங்கரிக்கவும்.

பின்னர் உடல்மனசுத்தியுடன் செம்பட்டு ஆடை உடுத்தி வெள்ளாட்டு 
தோலை விரித்து அதன்மீது வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து 
கொண்டு மன ஓர்நிலையுடன்
"ஓம்கிலியும் சவ்வும் றீயும் ஐயும் நமோபகவதிதேவி டங்டங் சுவாகா"
என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் 
செபித்தால் ஆக்ருஷணம் சித்தியாகும்.
ஆக்ருஷணம் சித்தினால் நாம் நினைத்த எதையும் நம்மை 
நோக்கி வரவழைக்கலாம். உலக மக்கள் தனக்கு வேண்டியதை 
அடைந்து கொள்வதற்க்கா இதைப்பற்றி விவரமாக சொன்னேன் 
என்கிறார் அகத்தியர்.

                                          பகிர்வில் ர.சடகோபால்.BA